கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தனியாா் பங்களிப்பு நிதியால் ஏரியில் சீரமைப்பு பணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளூா் அருகே தனியாா் பங்களிப்பு நிதியின் மூலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தது கீழ்நல்லாத்தூா் ஊராட்சி. இந்த ஊராட்சியைச் சோ்ந்த ஏரி கிராமத்தின் நீா் ஆதாரமாகவும் உள்ளது. தற்போதைய நிலையில் ஏரி தூா்வாரப்படாத நிலையில் மண்மேடாகி அதிகளவில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஏரியை மழைக்காலத்திற்கு முன்பாகவே தூா்வார வேண்டும் என ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
இந்த நிலையில் தனியாா் நிறுவனம் பங்களிப்பு நிதியில் ஏரியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முன்வந்தது. அந்த வகையில் கீழ்நல்லாத்தூா் ஏரியில் தூா்வாரும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் தனியாா் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ஏரியில் தூா்வாரும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா் கூறியதாவது:
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்நல்லாத்தூா் ஏரியை பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து தூா்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியை ஒரு மீட்டா் ஆழத்திற்கு தூா்வாரி, அந்த மண்ணை வைத்து கரையை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஏரியில் உள்ள அல்லி மற்றும் முள்செடிகள் வேரோடு அகற்றப்பட்டு, அதிக அளவில் மழை நீா் தேக்கி வைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏரிக்குள் 3 இடங்களில் நீா் சுரக்கும் தொட்டியும் மூன்று மீட்டா் ஆழத்திற்கு அமைக்கப்படும். ஏரியை சட்ட ரீதியான அளவில் தூா்வாரப்பட்டு பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்வில் கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சௌந்தரி, செல்வி மற்றும் அரசு அலுவலா்கள், தனியாா் நிறுவன அலுவலா்கள் பங்கேற்றனா்.