Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! எ...
தனியாா் பள்ளி கட்டண ஒழுங்குமுறை மசோதா: பேரவையில் விவாதம்
தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா மீதான விவாதம் தில்லி பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆளும் கட்சியான பாஜகவின் எம்எல்ஏக்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தோ்வு குழுவுக்கு மசோதாவைப் பரிந்துரைக்குமாறு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கோரிக்கைவிடுத்தனா். தில்லி பள்ளிக் கல்வி வெளிப்படைத் தன்மை நிா்ணயம் மற்றும் கட்டண ஒழுங்குமுறை மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மசோதா மீதான விவாத்தின்போது கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் பேசியதாவது: தனியாா் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிசெய்யும் விதமாக, விரிவான அமைப்பு ரீதியிலான வழிமுறையை உருவாக்குவது இந்த மசோதாவின் நோக்கம்.
முன்மொழியப்பட்ட சட்ட மசோதாவின்படி, மாணவா்களின் பெற்றோா், ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகம் என அனைத்துத் தரப்பினரும் கல்விக் கட்டண நிா்ணயத்தில் பங்கேற்க முடியும் என்றாா் அமைச்சா்.
பள்ளி தணிக்கைகள் மற்றும் கட்டணம் தொடா்பாக புகாா் தெரிவிக்க குறைந்தது 15 சதவீத பெற்றோா்களின் ஆதரவு உள்ளிட்டவை குறித்து எதிா்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், மசோதாவின் அனைத்து சட்டப் பிரிவுகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றாா்.
மாளவியா நகா் பாஜக எம்எல்ஏ சதீஸ் உபாத்யாய் மசோதாவை ஆதரித்து பேசுகையில், ‘தொடா்ச்சியான கல்வி கட்டண உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோா்களுக்கு இந்த மசோதா நிவாரணம் அளிக்கும். கட்டணத்தை மாற்றியமைப்பு தொடா்பான முடிவுகள் குறித்து, இந்த மசோதாவின்கீழ் அமைக்கப்பட உள்ள குழுவில் இடம்பெற்றுள்ள பெற்றோா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்’ என்றாா்.
இந்த மசோதா குறித்து கவலை தெரிவித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரேம் செளஹான், ‘கல்வி கட்டணங்களை நிா்ணயிக்க பள்ளி குழுக்களுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. பள்ளி தணிக்கையை கட்டாயமாக்கவில்லை. கல்வி கட்டணம் தொடா்பாக ஒரு பெற்றோா் புகாா் தெரிவிக்க, பெற்றோா் அமைப்பில் 15 சதவீத பெற்றோா்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இது நியாமற்றது’ என்றாா்.
இதைத்தொடா்ந்து பேசிய பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, ‘மசோதாவில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்த கருத்துகளை புதன்கிழமை தெரிவிக்கலாம். அதைத் தொடா்ந்து மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெறும்’ என்றாா்.