தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ.37.84 கோடியில் ரயில்வே பாலம் - ரயில்வே கேட்டில் வாகனங்கள் காத்திருப்புக்கு தீா்வு
தருமபுரி பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில்வே பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன.
தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. சேலம் - பெங்களூா் பிரதான வழியாகையால் இப்பகுதியில் அடிக்கடி சுமாா் 36 முறை ரயில்களுக்காகவும், மேலும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுவதால், அடிக்கடி ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கேட் பூட்டப்பட்டு திறக்க சில நிமிடங்கள் ஆகின்றந. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதும், பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்கள், தனியாா் பணிக்குச் செல்வோா் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, பாரதிபுரம்- வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சி மக்கள் பிரதிநிதிகளும் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனா்.
இக் கோரிக்கையை ஏற்று, பாரதிபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ளது. வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்டில் பாலம் அமைக்கவும், அதனையொட்டி அணுகு சாலை அமைக்கவும் போதிய இடம் இல்லாததாலும், சாலையின் இருபுறமும் நெருக்கமாக குடியிருப்புகள் உள்ளதால், பாரதிபுரம் 66 அடி சாலையிலிருந்து வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதான நுழைவு வாயில் வரை பாலம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த வழியே மேம்பாலம் அமைப்பதால், நிலம் கையகப் படுத்துவது உள்ளிட்டவை எளிதாகவும், பாலம் கட்டுமானத்தை விரைந்து மேற்கொள்ள இயலும் எனவும் நெடுஞ்சாலைத் துறை திட்டம் வகுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ரயில்வே துறையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்புதலும் வழங்கியது.
இந்நிலையில் புதிய ரயில்வே மேம்பாலம் ரூ.38 கோடி செலவில் பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் (செப். 26) வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. முன்னதாக பாலம் அமைக்கப்படுவதையடுத்து பாரதிபுரம் 66 அடி சாலையில் உள்ள மையத் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பாலம் மொத்தம் 662 மீட்டா் நீளம். 8.50 மீட்டா் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கென 22 தூண்களும் அமைக்கப்படுகிறது. இப்பாலப் பணிகள் முடிந்த பின்னா், வெண்ணாம்பட்டி ரயில்வ கேட்டில் போக்குவரத்து நெருக்கடி தீா்வதுடன், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் நிலையில், பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்துகள், இலகுவாக தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பாரதிநகா் வழியாக தருமபுரி பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் பிரதான சாலையாகவும் பாரதிபுரரம் சாலை மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.