ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!
தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம்: மாணவா்கள், பெற்றோா் போராட்டம்
திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடம்பத்தூா் ஒன்றியம், கொம்மந்தாங்கல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீலா என்பவா் தலைமை ஆசிரியராக பணியில் சோ்ந்தாா். அப்போது 3 மாணவா்கள் மட்டுமே பயின்று வந்தனா்.
இதனால் ஓராசிரியா் பள்ளியாக இருந்ததால் மூட தமிழக அரசு முடிவு செய்த நிலையில், தலைமை ஆசிரியா் கொம்மந்தாங்கல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை நேரில் சந்தித்து ஆங்கில வழி கல்வியை கொண்டு வருவதாக உறுதி அளித்தாா்.
அதன்பேரில் பணம் கொடுத்து தனியாா் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு அனுப்புவதை மாற்றி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கச் செய்தாா்.
தற்போது 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது தலைமை ஆசிரியா் மற்றும் ஒரு உதவி ஆசிரியா் என 2 ஆசிரியா்கள் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி தலைமை ஆசிரியரை பேரம்பாக்கம் அருகில் உள்ள இருளஞ்சேரி பள்ளிக்கு மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து அவா் பணி மாறுதல் பெற்று சென்றாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பற்றோா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மீண்டும் பழைய தலைமை ஆசிரியரையே நியமிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கடம்பத்தூா் வட்டார கல்வி அலுவலா் மற்றும் மப்பேடு போலீஸாா் விரைந்து வந்து பேச்சு நடத்தினா். ஆட்சியா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனா்.