வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு
போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை.. சென்னையில் 3 பேர்கைது; பின்னணி என்ன?
சென்னையில் போதைக்காக சிலர் உடல் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதனால், பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக 12 காவல் மாவட்டங்களில் போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான T.H. ரோடு மற்றும் தொப்பை விநாயகர் கோயில் சந்திப்பு பகுதியில் போதைக்காக உடல் வலி நிவாரண மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்தபோது, அதில் உடல்வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி வாகனச் சோதனையில் ஈடுபட்டோம். அப்போது அவ்வழியாக வந்த பெண் உள்பட மூன்று பேரிடம் விசாரித்தோம். அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் வைத்திருந்தனர். அதுகுறித்து விசாரித்தபோது போதைக்காக சிலர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதும் அதற்காக சட்டவிரோதமாக இந்த மாத்திரைகளை விற்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தோம். விசாரணையில் அவர்கள் கொடுங்கையூரைச் சேர்ந்த விக்னேஷ் (25), அவரின் அம்மா மேனகா (40), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷின் கூட்டாளி தினகரன் (23) எனத் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 490 மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸார் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். இதில் விக்னேஷ், மும்பையிலிருந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி வந்து, சென்னையில் அவரது தாய் மற்றும் கூட்டாளி தினகரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்திருக்கிறார்.
கைதான விக்னேஷ் மீது 3 குற்ற வழக்குகளும், மேனகா மற்றும் தினகரன் மீது தலா ஒரு குற்ற வழக்கும் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
போதை மாத்திரை விற்ற வழக்கில் தாய், மகன் கைதான சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.