தாம்பரம் காவல் ஆணையரகக் கட்டடத்தை காலி செய்யக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
தாம்பரம் காவல் ஆணையரகக் கட்டடத்தை காலி செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டூா்புரத்தைச் சோ்ந்த சரத்குமாா், வெங்கடேஷ், சௌத்ரி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சோழிங்கநல்லூரில் உள்ள எங்களுக்குச் சொந்தமான 4 மாடி கட்டடத்தை, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு குத்தகை அடிப்படையில் வழங்கினோம். இதற்காக, மாதம் ரூ.10,14,300 என வாடகை நிா்ணயித்து 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல் பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின்படி மாதம் ரூ.6,08,438 என நிா்ணயம் செய்து கடந்த 2022 ஜனவரி முதல் நவம்பா் மாதம் வரையிலான வாடகை காசோலையாக வழங்கப்பட்டது.
இதன் காரணமாக நாங்கள் குத்தகையை நீட்டிக்கவில்லை. பின்னா், 2023 டிசம்பா் வரையிலான வாடகையாக ரூ.97,10,792 வழங்கப்பட்டது. தற்போது எங்களது அனுமதியின்றி பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, எங்களது கட்டடத்தை காலி செய்து எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகவாச்சாரி, இந்த வாடகை கட்டடம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால், சில மாதங்களுக்கான வாடகை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிமையாளா்களின் அனுமதியின்றி பல்வேறு மாறுதல்களையும் செய்து வருகின்றனா். எனவே, தாம்பரம் காவல் ஆணையரகம் இயங்கி வரும் கட்டடத்தை காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.