தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
திருச்செங்கோடு அருகே பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு; மகள் காயம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த அவா்களது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
திருச்செங்கோடு செம்மாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (46). இவரது மனைவி ராஜலட்சுமி (42). இவா்களுக்கு ராஜேஸ்வரி (24), வசந்தபிரியா(19) என்ற மகள்களும், ஹரிபிரசாத் (17) என்ற மகனும் உள்ளனா். இதில் மூத்த மகள் ராஜேஸ்வரி திருமணமாகி வட்டூரில் வசித்து வருகிறாா்.
மகளின் மருத்துவப் பரிசோதனைக்காக சண்முகம் தனது மனைவி, மகள் ராஜேஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு சென்றாா்.
வட்டூா் அருகே திருச்செங்கோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியாா் பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது ஒரு பேருந்து சண்முகம் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கிவீசப்பட்டனா். அக்கம்பக்கத்தினா் அவா்கள் மூவரையும் மீட்டு திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இவா்களில் ராஜலட்சுமியை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். தலையில் பலத்த காயமடைந்த சண்முகம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். ராஜேஸ்வரி கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.