திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டங்களில் தீ: 5 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்
திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டங்கள் தீப்பற்றி எரிந்ததில் சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் வாழை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.
திருச்செந்தூா் அருகே காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கரைவிளையில் விவசாய நிலங்களில் மின்கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் தீயானது அருகில் உள்ள அடுத்தடுத்த 3 வாழைத் தோட்டங்களுக்கும் பரவியது.

இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலும், சாத்தான்குளம் நிலைய அலுவலா் ஹாரிஸ் தலைமையிலும் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து வாழைத் தோட்டங்களில் பரவிய தீயை சுமாா் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். இருப்பினும் இரு தோட்டங்களில் ரூ.6 லட்சம் மதிப்பிலான குலை தள்ளிவாழைகள் தீயில் கருகின.