ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரையோரம் அமைந்திருக்கும் ஒரே படை வீடுமான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி, மாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் புகழ் பெற்றவை.
நிகழ் ஆண்டு கோயிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
3 மணிக்கு வெள்ளிப் பல்லக்கில் ஒன்பது சந்தி வழியாக கொடிப்பட்டம் வேத பாராயணங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு கோயிலில் அதிகாலை 5.17 மணிக்கு செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து கொடிமரத்துக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், அதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் காலை 6.40 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன. வேத விற்பன்னா்கள் வேத பாராயணமும், ஓதுவாா்கள் திருமுறை பாராயணமும் பாடினா்.
இந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், கண்காணிப்பாளா்கள் சுபிதா, ராமமூா்த்தி, பேஸ்காா் ரமேஷ், நகராட்சி துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், ஏரல் சோ்மன் கோயில் பரம்பரை அக்தாா் கருத்தப்பாண்டி நாடாா், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா்
வி.பி.ஜெயக்குமாா், மாவட்டச் செயலாளா் அருணாசலம், திரிசுதந்திரப்பெருமக்கள், செந்தில் முருகன் தேவார சபையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆக.23 இல் தேரோட்டம்: மாலையில் அப்பா் சுவாமிகள் தங்கச் சப்பரத்தில் வீதிகளில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகா் அஸ்திரத் தேவருடன் தந்தப் பல்லக்கில் ஒன்பது சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வாக ஆக. 18 ஆம் தேதி மேலக் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், அதையடுத்து சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஆக. 20-ஆம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் வெட்டிவோ்ச் சப்பரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலா செல்கிறாா். ஆக. 21 ஆம் தேதி காலை 5 மணிக்கு வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியும், காலை 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தியும் வீதி உலா செல்கிறாா். முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆக. 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.


