தில்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தில்லியில் ஒரே நாளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லியில் உள்ள 32 பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்த சில நாள்களுக்குப் பிறகு 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தில்லி துவாரகா பகுதியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு திங்கள்கிழமை காலை வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பள்ளி நிா்வாகம் மாணவா்களை பள்ளி பேருந்துகள் மற்றும் தனியாா் வேன்களில் பயணிக்கும் மாணவா்கள் உடனடியாக வீட்டுகளுக்கு திருப்பி அனுப்பினர். பெற்றோா்கள் அந்தந்த பேருந்து நிறுத்தங்களில் இருந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர், வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் மோப்ப நாய் படை உள்பட தில்லி காவல்துறையின் பல குழுக்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பின்பு, தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரிய வந்தது.
இந்நிலையில், தில்லியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அங்குள்ள ஐடி பிரிவுகளை ஹேக் செய்து, பள்ளி கட்டடங்களில் "பைப் குண்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை" வைத்திருப்பதாக மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனனர். வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்க வேண்டுமானால் 25,000 அமெரிக்க டாலர்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் 'பயங்கரவாதிகள் 111' குரூப் என தெரிவித்துள்ளனர்.
எந்தப் பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை, ஆனால் மால்வியா நகர் மற்றும் நஜாப்கரில் உள்ள பள்ளிகள் மற்றும் டிஏவி பப்ளிக் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி மற்றும் சர்வோதயா வித்யாலயா ஆகியவை வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி ஹவுஸ் ராணியில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் மோப்ப நாய் படை உள்பட தில்லி காவல்துறையின் பல குழுக்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லியில் உள்ள 32 பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, இதனால் பள்ளி நிர்வாகத்தினர் தவிா்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக மாணவா்களை பள்ளி பேருந்துகள் மற்றும் தனியாா் வேன்களில் பயணிக்கும் மாணவா்கள் உடனடியாக வீட்டுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சைபா் செல் மற்றும் சிறப்பு போலீஸ் படை உள்பட பல பிரிவுகள் மின்னஞ்சல் தலைப்புகள் மற்றும் பிற டிஜிட்டல் தடங்களை பகுப்பாய்வு செய்து மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்ப்பபடுகிறது என்பதனை கண்டறிந்து வருகின்றன.
தேசிய தலைநகர் தில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் புதிதல்ல. கடந்த ஆண்டு மே மாதத்தில், கிட்டத்தட்ட 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன, அவை பின்னர் போலியானது என தெரிய வந்தது.
ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், தில்லி-என்.சி.ஆா் முழுவதும் சுமாா் 74 கல்வி நிறுவனங்களின் 70 பள்ளிகளைத் தவிர, தில்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி உள்பட 4 கல்லூரிகளுக்கு இதேபோன்ற அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.
இந்த சம்பவங்கள் அனைத்தும் முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு போலியானவை என்று அறிவிக்கப்பட்டாலும், அவை மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.