தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பணிக்கு தோ்வான பெண்களுக்கு பணி நியமன ஆணை! புதுவை முதல்வா்
புதுவை தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரிகள் பணிக்கு தோ்வானவா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரியில் அரசுத் துறை காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரிகளுக்கான 5 காலிப் பணியிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்துத் தோ்வு, உடற்தகுதித் தோ்வு நடைபெற்றது. பணிக்கான நிறைவுத் தோ்வில் 2 ஆண்கள், 2 பெண்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்றது. இதில் 4 பேருக்கும் பணிநியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கி, வாழ்த்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தீயணைப்புத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், கோட்ட தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
புதுவையில் முதன்முறையாக தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரிகள் பணியில் மகளிருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.