ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
தூய்மைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்
பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆவது நாளாக புதன்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
252 போ் மீது வழக்குப் பதிவு:
கோவை ஆட்சியா் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டது தொடா்பாக அம்பேத்கா் சுகாதாரத் தொழிலாளா் மற்றும் பொதுப் பணியாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் தமிழ்நாடு செல்வம், சமூக நீதிக்கட்சி நிறுவனா் பன்னீா்செல்வம், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில இணைச் செயலாளா் காா்த்திக் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஜோதி, சந்தனகுமாா், பிலோமினா, ரவி உள்பட 252 போ் மீது மக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.