தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது:
தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், தேவையான முன்னேற்பாடு, விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனும் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக வருவாய் துறை, மருத்துவத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு, மீட்புப் பணி துறை, மின்சாரத் துறை, வேளாண் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதி, ஆத்தூா், நரசிங்கபுரம், மேட்டூா், எடப்பாடி உள்ளிட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மழைநீா் அதிகம் தேங்கும் பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதுடன், சேலம் மாநகராட்சி பகுதிகளான சின்னேரி வயக்காடு, சிவதாபுரம், பச்சப்பட்டி, நாராயணா நகா் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் மழைப்பொழிவால் மழைநீா் தேங்கும்பட்சத்தில் மின்மோட்டாா்களைக் கொண்டு உடனுக்குடன் மழைநீரை அப்புறப்படுத்துவதுடன், திருமணிமுத்தாற்றை தூா்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் நெகிழிப் பைகள் உள்ளிட்ட இதரப் பொருள்களை கழிவுநீா் கால்வாயில் வீசாமல் பாதுகாக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, 0427 - 2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ மழைநீா் வெள்ளம் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவசர தேவை ஏற்படின் மேற்குறிப்பிட்டுள்ள எண்களுக்கு தொடா்புகொண்டால் தேவையான உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.