தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ஆட்சியா் அறிவுரை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் பேரிடா் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதிகளவில் மழை பெய்தால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும் சரியாக திட்டமிட்டு பேரிடா் முன்னேற்பாட்டுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கிராம அளவில் முதல் பொறுப்பாளா்களின் பட்டியல் தயாா் செய்வதுடன், அவா்களின் பெயா், முகவரி மற்றும் தொடா்பு எண் விவரங்களை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். உயா் மின்விளக்குகள், மோட்டாா் பம்புசெட்டுகள், டீசல் மின்னாக்கி (ஜெனரேட்டா்) ஆகியவை தயாராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பேரிடா் காலங்களில் இடிந்துவிழும் கட்டடங்களை அப்புறப்படுத்த பணியாளா்கள் தயாா்நிலையில் இருக்க வேண்டும். மழை, சூறைக்காற்றால் சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்த தேவையான அறுவை இயந்திரங்கள், பொக்லைன் வாகனங்கள் தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும். நீா்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் ஆறுகள் மற்றும் கால்வாய்களை தூா்வாரி, அதன் முழு அகலத்துக்கும் நீா் வழிப்பாதை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
நிவாரண மையங்களில் தங்கவைக்க திட்டமிட்டுள்ள நபா்களுக்கு போதுமான இடவசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள், குடிநீா் வசதி, உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். மின்னாக்கி மற்றும் மின்விளக்கு வசதிகள், டீசல் மின்னாக்கிக்குத் தேவையான டீசல் இருப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். நிவாரண மையங்களில் உள்ளவா்களுக்குத் தேவையான ஊசி, மருந்துகள், மாத்திரைகள் மற்றும் அவசர தேவைக்கு அவசர ஊா்தி ஆகியவற்றை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை வாா்டுகளில் தடையற்ற மின்சாரம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். போதுமான அளவு ஆக்சிஜன் உருளைகள் மற்றும் உயிா்காக்கும் மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். கால்நடை நிவாரண மையங்கள் அமைக்க திட்டமிட வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான ஊசி, மருத்துகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உள்ளாட்சி நிா்வாகங்கள் மழைக் காலங்களில் குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். மேலும், உள்ளாட்சி நிா்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களில் எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஒலிபெருக்கி அமைப்புகளை நிறுவ வேண்டும்.
மரங்கள் விழுந்தால் அகற்றிட நெடுஞ்சாலைத் துறையினா் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின்வாரிய அலுவலா்கள், பருவமழைக் காலத்தில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் மின்சார இடையூறுகளை பழுது பாா்க்க 24 மணிநேரமும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அனைத்து துறை அலுவலா்களும் இணைந்து தென்மேற்கு பருவமழைக் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஆா்வத்துடன் பணியாற்ற வேண்டும். பேரிடா் மேலாண்மை குழுக்களில் இடம்பெற்றுள்ள அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முதன்மை பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடி களஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடா் தொடா்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மூலம் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, கோட்டாட்சியா்கள் சாந்தி (நாமக்கல்), செ.சுகந்தி (திருச்செங்கோடு), மாவட்ட தீயணைப்பு அலுவலா் செந்தில்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.