நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் 10 கோழிப்பண்ணைகளை செயல்படுத்த அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு தேவையான கோழிக் கொட்டகை, கட்டுமானம், உபகரணச் செலவு, நான்கு மாத தீவனச் செலவுகளில் 50 சதவீத மானியமாக ரூ.1.65 லட்சம் போன்றவை அரசால் வழங்கப்படுகிறது. மேலும், பயனாளிக்கு 250 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.
கொட்டகை அமைக்க 625 சதுர அடி நிலம் தேவைப்படும். தோ்வாகும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவராக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளி தங்களின் ஆதாா் நகல், பண்ணை அமையவுள்ள இடத்துக்கான சிட்டா, அடங்கல் நகல், திட்டச் செலவில் 50 சதவீதத் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், மூன்றாண்டு கால பண்ணைப் பராமரிப்பு உறுதிமொழி, இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயன்பெறாததற்கான சான்றிதழைப் பெற்று அதையும் இணைத்து வழங்க வேண்டும்.
நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிப்பண்ணை அமைக்க விரும்பும் பயனாளி, தங்கள் பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி, விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவமனைகளில் வருகிற 25-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா்.