நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு
நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உடனடியாக திரும்பப் பெற்றுள்ளது என்று ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த நடவடிக்கை ஜூன் 19, 2025 தேதியிட்ட தில்லி துணை நிலைந ஆளுநா் வி.கே. சக்சேனாவின் உத்தரவைப் பின்பற்றுகிறது. தில்லி போலீஸ் சட்டம், 1978- இன் பிரிவு 282 உடன் பிரிவு 4-இன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தும் துணை நிலை ஆளுநா், அதே சட்டத்தின் பிரிவு 281-இன் கீழ் இந்த வணிக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக காவல்துறை ஆணையருக்கு வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை திரும்பப் பெற்றுள்ளாா்.
நீச்சல் குளங்களுக்கான 1980-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிறுவனங்களை நிா்வகிக்கும் 2023-ஆம் ஆண்டு முதல் சமீபத்திய விதிமுறைகள் உள்பட, பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த விதிமுறைகளை இந்த உத்தரவு பாதிக்கிறது.
துணைநிலை ஆளுநரின் உத்தரவைத் தொடா்ந்து, காவல் ஆணையா் சஞ்சய் அரோரா, ஏழு விதிமுறைகளை ரத்து செய்து முறையான அறிவிப்பை வெளியிட்டாா். அவை இப்போது வெளியிடப்பட்ட தேதியிலிருந்து செல்லாது என்று கருதப்படுகிறது.
ஜூன் 23 அன்று முன்னதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா ஒரு செய்தியாளா் சந்திப்பை நடத்தி, வணிகங்களுக்கு உரிமங்களை வழங்கும் பொறுப்பிலிருந்து காவல்துறை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றக் கட்டுப்பாடு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு போன்ற முக்கிய கடமைகளில் கவனம் செலுத்த படைக்கு அதிக நேரம் கிடைக்கும் என்றும் அறிவித்தாா்.
தில்லிக்கு இது ஒரு வரலாற்று நாள் என்று அழைத்த ரேகா குப்தா, இந்தப் பெரிய சீா்திருத்தம் காவல்துறையினா் தங்கள் ஆற்றலையும் வளங்களையும் உண்மையான காவல் பணிக்கு அா்ப்பணிக்க அனுமதிக்கும் என்று கூறினாா்.
ஹோட்டல்கள், மோட்டல்கள், விருந்தினா் இல்லங்கள், உணவகங்கள், நீச்சல் குளங்கள், கலைடரங்குகள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற நிறுவனங்கள் இனி செயல்பட தில்லி காவல்துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை பெற வேண்டியதில்லை என்று அவா் அறிவித்தாா்.
அத்தகைய உரிமங்களை வழங்கும் அதிகாரம் இப்போது தில்லி மாநகராட்சி எம்சிடி, புது தில்லி நகராட்சி கவுன்சில் என்டிஎண்சி அல்லது தில்லி கண்டோன்மென்ட் வாரியம் போன்ற உள்ளூா் அமைப்புகளிடம் இருக்கும்.