மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன...
நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமா்ப்பித்த இருவா் கைது
சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் பிணை வழங்குவதற்கு போலி ஆவணங்கள் சமா்ப்பித்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை எழும்பூா் தலைமை பெருநகர குற்றவியல் நடுவா் மன்றம், கடந்த ஏப்.22-ஆம் தேதி வடிவேல் என்பவருக்கு குற்ற வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை தீா்ப்பை எதிா்த்து வடிவேல் மேல்முறையீடு செய்தாா். இதற்கிடையே அந்த நீதிமன்றம் வடிவேலை பிணையில் விடுவிப்பதற்கு, கடந்த 21-ஆம் தேதி உத்தரவிட்டது. பிணை வழங்க இருவரிடம் உத்தரவாதம் பெறவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வடிவேலுக்கு இரு நபா் உத்தரவாதம் வழங்குவதற்காக, கொருக்குப்பேட்டை காரனேஷன் நகரைச் சோ்ந்த ஏ.மோகன் (60), தண்டையாா்பேட்டை அஜிஸ்நகரைச் சோ்ந்த மு.முகமது ரபீ (50) ஆகியோா் தங்களது ஆதாா் காா்டு, ரேசன் காா்டு உள்ளிட்ட ஆவணங்களை வழங்கினா். அவற்றை நீதிமன்றம் பெற்றுக்கொண்டு ஆய்வு செய்தது. அப்போது இருவரும் சமா்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து நீதிமன்றம் சாா்பில், எழும்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோகன், முகமது ரபீ ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.