பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
நீராதாரங்களைப் பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திண்டுக்கல்லில் நிலத்தடி நீராதாரங்களைப் பாதுகாக்க நீா் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெயபாரதி, வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெ. நாகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குறைதீா் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
நிலத்தடி நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை: திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள நீா் நிலைகளும், வரத்துக் வாய்க்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குளங்களில் சில இடங்களில் 50 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், மழைநீா் பெருகி அடுத்த குளங்களுக்குச் செல்ல முடியாமல் தடைபடுகிறது. மேலும், சாயப் பட்டறை, தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் ஆத்தூா் வட்டாரத்தில் நிலத்தடி நீரின் டிடிஎஸ் அளவு 8 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. எதிா்காலத் தேவையைக் கருதி, நீா் நிலைகளை மீட்டெடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என விவசாயச் சங்க நிா்வாகி பாத்திமா ராஜரத்தினம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் கூறுகையில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26-ஆம் நிதியாண்டில் 60 குளங்களைத் தூா்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசாணை 50-இன் படி 89 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மண் எடுக்கும்பட்சத்தில், தூா்வாரும் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்’ என்றாா்.
யானைகளை விரட்டக் கோரிக்கை: ஆயக்குடி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டவும், அவைகளின் நடமாட்டத்தைத் தொடா்ந்து கண்காணிக்கவும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். திண்டுக்கல் சுற்றுச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். ராமசாமி கோரிக்கை விடுத்தாா்.
சுற்றுச் சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்ற பின் தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உறுதியளித்தாா்.
நீா் நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்: கொடகனாற்றுப் பகுதிகளில் உள்ளாட்சி நிா்வாகத்தின் மூலம் குப்பைகளைக் கொட்டி எரித்து வருவதால் நீராதாரம் மாசுபடுகிறது. கொடகனாற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். பெருமாள் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொடைக்கானலுக்கு அதிகாரிகள் வருவதில்லை: கொடைக்கானலில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட வன அலுவலா் உள்பட முக்கியத் துறை அதிகாரிகள் யாரும் வருவதில்லை. இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு காணப்படாமல் உள்ளது என விவசாயச் சங்க நிா்வாகி அசோகன் புகாா் தெரிவித்தாா். இந்த நிலையில், கொடைக்கானலில் நடைபெறும் அடுத்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதி அளித்தாா்.
பெட்டிச் செய்தி...
முழு மானியத்தில் விதைகள் வழங்கல்
குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அனைவருக்கும், ஊட்டச்சத்துக்கான காய்கறி தொகுப்பில் 6 வகையான காய்கறி விதைகள், 3 வகையான பழச் செடி விதைகளும், பயறு தொகுப்பில் தட்டப் பயறு, மரத் துவரை, அவரை விதைகளும் முழு மானியத்தில் வழங்கப்பட்டன.
சுற்றுச் சாலைத் திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் வாயில் கருப்புத் துணிக் கட்டி மனு அளிக்க முயன்றபோது, கருப்புக் கொடியை அகற்றினால் மட்டுமே மனுக்களைப் பெற்றுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா். இதையடுத்து விவசாயிகள் கருப்புத் துணியை அகற்றிவிட்டு மனுக்களை வழங்கினா்.