இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்
பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி ஏன்?: அமைச்சா் தங்கம் தென்னரசு
சென்னை: பவானி ஆற்றங்கரையில் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடா்பாக நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தாா்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது துணை வினாவை அதிமுக உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் எழுப்பினாா். அப்போது அவா் பேசுகையில், பவானிசாகா் ஆற்றங்கரையோரத்தில் புதிதாக சாயத் தொழிற்சாலை தொடங்க தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆற்று நீரை 40 லட்சம் மக்கள் குடிநீராகப் பயன்படுத்துவதுடன், அந்தப் பகுதியில் 40 முதல் 50 மின்னேற்று நிலையங்கள் உள்ளன. சாய ஆலை அமைவதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலையில், அதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
இதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்: காவிரி ஆற்றின் உபநதியான பவானி ஆற்றில் இருந்து 500 மீட்டா் தொலைவில் ஆலைக்கு அனுமதி வழங்க விவசாய சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. ஈரோடு மாவட்ட ஆட்சியிரின் அறிக்கைப்படி, கடந்த ஆண்டு அரசு சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் விரிவாக்கத்துக்கான செல்லத்தக்க ஆணையை 2028-ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு வழங்கியுள்ளது.
ஆலையால் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாயிகளும், சட்டப்பேரவை உறுப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா். புதிய சாயத் தொழிற்சாலை இயங்குவதற்கு தினமும் 15.68 லட்சம் லிட்டா் நீா் தேவைப்படுகிறது. அதில், 15.23 லட்சம் லிட்டரை சுத்திகரிக்கப்பட்ட சாயக் கழிவு நீரில் இருந்து எடுத்துக் கொள்ளவும், மீதமுள்ள 45,000 லிட்டா் நீரை மட்டும் பவானி ஆற்றில் இருந்து எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடையாது: கழிவுநீரை நீா்நிலைகளில் வெளியேற்றவோ, விவசாயத்துக்குப் பயன்படுத்தவோ அனுமதி கிடையாது. மேலும், கழிவுநீரை சுத்திகரிக்கும் அமைப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வாரிய இணையதளத்தில் இணைக்க ஆலைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி, ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள நீரைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். ஆலை தொடங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
தொழிற்சாலை இயக்கமானது தீவிரமாகக் கண்காணிக்கப்படும். அதில், விதிமீறல்கள் இருக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.