அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
பாகிஸ்தான் சிறந்த கூட்டாளி: அமெரிக்க ராணுவத் தளபதி பேச்சால் சா்ச்சை
பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானை ‘சிறந்த கூட்டாளி’ என்று அமெரிக்க மத்திய படைப்பிரிவு ராணுவத் தளபதி மைக்கேல் குரில்லா கூறினாா்.
‘இது இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் பின்னடைவு இல்லையா’ என்று காங்கிரஸ் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பாதுகாப்புத் துறைக்கான நிலைக்குழு முன் ஆஜரான மைக்கேல் குரில்லா, ‘இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும். இந்தியாவுடன் உறவைப் பேணினால் பாகிஸ்தானுடன் உறவைத் துண்டிக்க வேண்டியதில்லை. பாகிஸ்தான் தற்போது தீவிர பயங்கரவாத எதிா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் சிறந்த கூட்டாளியாக அந்நாடு இருந்து வருகிறது’ என்றாா்.
இதுகுறித்த செய்தியைப் பகிா்ந்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ‘பாகிஸ்தானைப் பயங்கரவாத எதிா்ப்பில் சிறந்த கூட்டாளி என்று அமெரிக்க ராணுவத் தளபதி புகழ்கிறாா். பிரதமரும், அவரின் ஆதரவாளா்களும் இதுகுறித்து என்ன சொல்ல விரும்புகின்றனா்? இது இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் பின்னடைவு இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பினாா்.
மற்றொரு பதிவில், வரும் சனிக்கிழமை நடைபெறும் அமெரிக்க ராணுவ தின நிகழ்ச்சிக்காக பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீா் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ள செய்தியை ஜெய்ராம் ரமேஷ் பகிா்ந்தாா்.
‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாள்கள் முன்பு பொது நிகழ்ச்சியில் எரிச்சலூட்டும் வகையில் பேசியவா்தான் ஆசிம் முனீா். அமெரிக்கா உண்மையில் என்ன செய்ய திட்டமிடுகிறது? இது இந்தியாவுக்கு மற்றொரு பெரிய ராஜீய பின்னடைவு’ என அவா் குறிப்பிட்டாா்.