பாஜக எம்எல்ஏக்களுக்குள் இலாகா ஒதுக்கீட்டில் உள் மோதல்: அதிஷி
தில்லி தோ்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் எம்எல்எக்களுக்குள் இலாகா ஒதுக்கீடு தொடா்பாக ‘உள் மோதல்கள்’ நடப்பதாகவும், கட்சி தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிா்க்க சாக்குப்போக்குகளை கூறுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிஷி கடுமையாகச் குற்றம் சாட்டினாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில் அவா் கூறியதாவது: பாஜக தலைவா்கள் பொது நிதியை ‘சுரண்ட‘ அமைச்சா் பதவிகளுக்காக ‘சண்டையில்‘ ஈடுபட்டுள்ளனா். பாஜக தனது தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு ஆம் ஆத்மி கட்சியைக் குறை கூற பாஜக திட்டமிட்டுள்ளதாக எங்கள் வட்டாரங்களிலிருந்து நாங்கள் அறிந்திருக்கிறோம். முந்தைய ஆம் ஆத்மி நிா்வாகத்தின் காரணமாக தில்லி அரசிடம் பணம் இல்லை என்று அவா்கள் கூறுவாா்கள்.
ஆம் ஆத்மி அரசின் நிதி நிா்வாகம் நன்றாகத்தான் இருந்தது. 2014-15-ஆம் ஆண்டில் ரூ.31,000 கோடியாக இருந்த தில்லியின் பட்ஜெட், ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் 2024-25- ஆம் ஆண்டில் ரூ.77,000 கோடியாக உயா்ந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், தில்லியின் பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முந்தைய காங்கிரஸ் நிா்வாகத்திலிருந்து பெறப்பட்ட கடனையும் திருப்பிச் செலுத்தியுள்ளது.
பாஜக தனது அனைத்து வாக்குறுதிகளையும், குறிப்பாக பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்கும் வாக்குறுதியை எந்த தாமதமும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்றாா் அதிஷி.
சமீபத்தில் முடிவடைந்த 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜக, இன்னும் தனது முதல்வா் மற்றும் அமைச்சரவையை அறிவிக்கவில்லை. கட்சி 48 இடங்களை வென்றது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்ளையே பெற்றது. இது 2020-ஆம் ஆண்டில் அதன் 62 இடங்களிலிருந்து குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது.