எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் பாகிஸ்தான்: பின்னணியில் என்ன நடக்கிறது?
பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாகிஸ்தான் அரசு இந்திய மதிப்பில் ரூ.77,343 கோடி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் பின்னணியில் இருப்பது யார்? என்ன நடக்கிறது? என்பதை உலக அரசியல் நகர்வுகளைப் பார்த்தால் தெளிவாகவே புலப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி...
பல கோடிகள் கடனில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.எஃப்.) நிதியுதவி முதுகெலும்பாக விளங்குகிறது. கடந்த 2023முதல், ஐ.எம்.எஃப்.-இன் நிதியை நம்பியே பாகிஸ்தானின் பெரும் பகுதி செலவினம் நடைபெறுகிறது. கடந்தாண்டு செப்டம்பரில், ஐ.எம்.எஃப். 7 பில்லியன் டாலர் தொகையை பாகிஸ்தானுக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்தது. சுருக்கமாகச் சொல்வதானால், பாகிஸ்தானின் பொருளாதாரம் ஐ.எம்.எஃப். கையில்...
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி மூலம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது மறைமுகமாக நடைபெறுகிறது.
மேற்கண்ட நிதியால் அந்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதால், பாகிஸ்தான் அரசால் தமது உள்நாட்டு வருவாயை ராணுவத்துக்கு ஒதுக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழிவகை செய்கிறது.
கடந்த 1958-ஆம் ஆண்டுமுதல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் 20-க்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் உற்ற துணையான சீனா...
பாகிஸ்தானின் ராணுவத்துக்கு தேவையான பங்களிப்பை வழங்குவதில் சீனா இறுக்கமாகக் கைகோர்த்து நிற்கிறது.
தமக்கு பக்கபலமாக இருக்கும் சீனா உள்ளிட்ட தோழமை நாடுகளிடமிருந்து 2024-25 நிதியாண்டில் சுமார் 12 பில்லியன் டாலர் கடன் வாங்க பாகிஸ்தான் முனைப்பு காட்டியுள்ளது. தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு சீனாவை அதிகம் சார்ந்திருக்கிறது பாகிஸ்தான்.
கடந்த காலங்களில் சீனாவிடமிருந்து பல கோடிகள் கடன் பெற்றுள்ள பாகிஸ்தானின் மொத்த கடனில் மூன்றில் ஒருபங்கு சீனாவிடமே பெறப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகள்...
மேற்காசியாவிலுள்ள வளைகுடா நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு தொடர்ச்சியாக பெரும் நிதியுதவி கிடைக்கிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலையில் பாகிஸ்தானின் மத்திய வங்கிக் கணக்கில், 2 பில்லியன் டாலர் தொகையை சவூதி அரேபியா செலுத்தி நிதியுதவியளித்தது. கடந்தாண்டு டிசம்பரில், மேலும் 3 பில்லியன் டாலர் வழங்கியது சவூதி அரேபியா.
அதேபோல, ஐக்கிய அரபு அமீரகம் 1 பில்லியன் டாலர் செலுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரியிலும் இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகம் 2 பில்லியன் டாலர் பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல, மேற்கண்ட நிதியுதவி மூலம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது மறைமுகமாக நடைபெறுகிறது.
இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாகிஸ்தான் அரசு இந்திய மதிப்பில் ரூ.77,343 கோடி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இன்னொருபுறம், பயங்கரவாத குழுக்களுக்கும் ஆதரவளித்து தமது எதிரி நாடுகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை ராணுவ உதவியுடன் அஸ்திரமாக பயன்படுத்தி வருவதும் வெளிப்படையாக அந்நாட்டின் அமைச்சர்களாலும் கடந்த காலங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.