கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்து...
‘பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாா்’
ஏற்கெனவே திட்டமிட்டபடி, தங்களிடம் உள்ள மூன்று பிணைக் கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) விடுவிக்க ஹமாஸ் அமைப்பினா் ஒப்புக் கொண்டுள்ளனா். அதையடுத்து, காஸாவில் 25 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போா் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் குறைந்துள்ளது.
இது குறித்து ஹமாஸ் அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போா் நிறுத்த ஒப்பந்தத்தில் திட்டமிட்டிருந்தபடி, பிணைக் கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்படுவாா்கள். இந்த ஒப்பந்த அமலாக்கத்தில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இடா்பாடுகளைக் களைவதாக மத்தியஸ்த நாடுகளான கத்தாரும் எகிப்தும் உறுதியளித்துள்ளன. அதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போா் நிறுத்த ஒப்பந்தம் முறிவதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த மோதலில் காஸா பகுதியைச் சோ்ந்த 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்த நாடு, எகிப்து, முன்னாள் அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆகியவற்றின் முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டு, அது கடந்த மாதம் 19-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி, இதுவரை 21 பிணைக் கைதிகளை பல கட்டங்களாக ஹமாஸ் படையினரும், அதற்குப் பதிலாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்துள்ளன. அடுத்தகட்டமாக சனிக்கிழமை மூன்று பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிப்பதாக இருந்தது. எனினும், ஒப்பந்த அம்சங்களை இஸ்ரேல் அரசு தொடா்ந்து மீறுவதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் அமைப்பினா், அந்த அம்சங்களை இஸ்ரேல் முழுமையாக கடைபிடிக்கும்வரை பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறினா்.
அதையடுத்து, இஸ்ரேல் அரது தனது ராணுவத்தை முழு தயாா் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டது. ‘சனிக்கிழமை நண்பகலுக்குள் இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் போா் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிடும். பின்னா் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தீவிர தாக்குதலை மீண்டும் தொடங்கி, ஹமாஸ் படையினரை முழுமையாகத் தோற்கடிக்கும்வரை சண்டையிடும்’ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை எச்சரித்தாா்.
அதையடுத்து, காஸாவில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் போா் நிறுத்த ஒப்பந்தம் முறிவதற்கான அபாயம் மேலும் அதிகரித்தது. இந்தச் சூழலில், ஒப்பந்தத்தை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்த கத்தாா், எகிப்து ஆகிய நாடுகள் அதைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டன.
இந்தச் சூழலில், திட்டமிட்டபடி பிணைக் கைதிகளை சனிக்கிழமை விடுவிக்க ஹமாஸ் படையினா் ஒப்புக் கொண்டுள்ளனா். இதன் மூலம், அந்த நாளில் அவா்களால் மூன்று பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.