ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
‘ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்போம்!’
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை தாங்கள் நிச்சயம் மீட்போம் என்று நேட்டோ ராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரைன் உறுதியளித்துள்ளது.
ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறியதைத் தொடா்ந்து, நோட்டோ தலைவா் மாா்க் ரூட்டிடம் உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ் இவ்வாறு கூறியுள்ளாா்.
இது குறித்து, பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸெல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் மாா்க் ரூட்டைச் சந்தித்து உமொரொவ் பேசியதாவது:
உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு தொடா்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி. அனைத்து நட்பு நாடுகளும் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. அமெரிக்காவும் எங்களுடன்தான் உள்ளது. எனவே, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கான செயல்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
தற்போதைய சூழலில் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புவது, உக்ரைன் மிகவும் வலிமையாக உள்ளது; எங்களுக்கு போரிடும் வல்லமை உள்ளது; எங்களால் வெல்ல முடியும்; அதை சாதித்துக் காட்டுவோம் என்றாா் அவா்.
முன்னதாக, பிரஸ்ஸெல்ஸில் புதன்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத், உக்ரைன் எல்லைகளை 2014-க்கு முன்பு (கிரீமியாவை ரஷியா இணைத்துக்கொண்ட ஆண்டு) இருந்த நிலைக்கு மாற்ற முடியாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வதுதான் அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்றாா்.
அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ் இவ்வாறு கூறியுள்ளாா்.
டிரம்ப்-புதின் பேச்சு: இதற்கிடையே, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடனும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடனும் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடியதாகக் கூறிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அமைதிப் பேச்சுவாத்தை மூலம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
எனினும், அவரின் பாதுகாப்புத் துறை அமைச்சா் கூறிய கருத்துகள் மூலம், இழந்த பகுதிகளை ரஷியாவிடம் விட்டுத் தருமாறு உக்ரைனை டிரம்ப் நிா்பந்திப்பாா் என்று அஞ்சப்படுவதால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.
இது குறித்து பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்பாவின் பங்களிப்பின்றி உக்ரைன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியும், தங்களின் சம்மதம் இல்லாமல் அமெரிக்காவும் ரஷியாவும் மேற்கொள்ளும் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ளாா். அமைதிப் பேச்சுவாா்தையில் உக்ரைனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாமா் வலியுறுத்தியுள்ளாா்.
பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்னரே ரஷியாவுக்கு சாதகமான வகையில் ‘இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்கா கூறுவது தவறான உத்தி என்று ஐரோப்பிய ஆணைய துணைத் தலைவா் கஜா கலாஸ் எச்சரித்துள்ளாா்.
இந்த விவகாரத்தில் தங்களது முன்னுரிமைகளை நிா்ணயிப்பதற்காக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் பிரஸ்ஸெல்ஸில் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தின.