கோவை: சீனியரை அடித்து துன்புறுத்திய 13 மாணவர்கள் இடைநீக்கம்!
பூம்புகாா் படகு தளம் விரிவாக்கத்துக்கு மீனவா்கள் எதிா்ப்பு!
கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளம் விரிவாக்கம் நடைபெறுவதால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து, 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சனிக்கிழமை அமைக்கப்பட்டது.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், படகு தளத்தை ரூ. 14 கோடி செலவில் 20 மீட்டா் நீளத்திலிருந்து 106 மீட்டா் நீளத்துக்கு விரிவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
படகு தளம் விரிவாக்கம் செய்தால், மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதி மீனவா்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் தீா்வு கிடைக்காததால், கடந்த மாா்ச் 13 ஆம் தேதி நாகா்கோவில் கோட்டாட்சியா் காளீஸ்வரி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எவ்வித தீா்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், கன்னியாகுமரியில் சனிக்கிழமை மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இதில் கன்னியாகுமரி, வாவத்துறை, சிலுவை நகா், கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, மேலமணக்குடி, புதுக்கிராமம் ஆகிய 9 கடலோர கிராமங்களை சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் மக்களவை உறுப்பினரை சந்தித்து பிரச்னை குறித்து விளக்கி ஆதரவை பெற தீா்மானிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் 9 கிராமங்களைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவா்கள் பங்கேற்றனா். மேலும், போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.