பேருந்து நிறுத்தத்தில் நிற்காத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை
ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியாா் பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனப் போக்குவரத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
ராசிபுரம் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு பாதையில் மேம்பாலத்தின் கீழ் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நாமக்கல், ராசிபுரம் போன்ற பகுதியில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பெரும்பாலான பேருந்துகள் நிற்காமல் மேம்பாலத்தின் மேல் சென்றுவிடுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா். மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து ராசிபுரம் மோட்டாா் போக்குவரத்து வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா், பறக்கும் படை போக்குவரத்து ஆய்வாளா் சரவணன் ஆகியோா் தேசிய நெடுஞ்சாலையில் திடீா் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, தேங்கல்பாளையம் பிரிவு பாதை வழியாக செல்லாமல் மேம்பாலம் வழியாக சென்ற 3 பேருந்துகளை நிறுத்தி வழக்குப் பதிவு செய்து மேல்நடவடிக்கைக்காக ஆட்சியருக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அனைத்து பேருந்துகளும் தேங்கல்பாளையம் பிரிவு பாதை வழியாக செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.