தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி
பேளூா் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
வாழப்பாடி: பேளூரில் திங்கள்கிழமை கூடிய வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ரூ. 1000 வரை கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராம விவசாயிகள் மட்டுமின்றி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை கிராமங்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலானோா் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனா்.
சிறு, குறு விவசாயிகளும், விவசாய தொழிலாளா்களும் ஆடு வளா்ப்பை உபதொழிலாக செய்து வருகின்றனா். இதனால், மாவட்ட அளவில் ஆடுகள் வளா்ப்புத் தொழிலில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
வாழப்பாடியை அடுத்த பேளூரில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக திங்கள்கிழமைதோறும் ஆடுகள் விற்பனைக்கான வாரச்சந்தை கூடிவருகிறது.
பேளூா் சந்தைக்கு வாரந்தோறும் வெள்ளாடு, செம்மறி, மாலா உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 600 முதல் 700 வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், ஆடி 18, ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகைக் காலங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலுாா் மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களும் வளா்ப்புக்காவும், இறைச்சிக்காவும் ஆடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் இங்கு வந்து செல்கின்றனா். இதனால், வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையும் பண்டிகை தருணங்களில் ரூ. 1 கோடி வரையும் ஆடுகள் விற்பனை நடைபெறுகிறது.
வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிராமப்புற தெய்வங்களுக்கு தேரோட்டம், திருவிழாக்கள் நடந்து வருகிறது. இவ்விழாவில் ஆடு பலியிட்டு உறவினா்கள், விருந்தினா்களுக்கு விருந்து நடத்துவது இப்பகுதி மக்களிடையே வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், பேளூரில் திங்கள்கிழமை கூடிய வாரச்சந்தையில் அதிகாலையில் இருந்தே ஆடுகள் வாங்குவதற்கு கூட்டம் அலை மோதியது.
குறிப்பாக, ஆட்டுக்கிடாக்களை வாங்குவதற்கு பலரும் ஆா்வம் காட்டியதால், ஆடுகள் அமோகமாக விற்பனையானதோடு, கூடுதல் விலையும் கிடைத்தது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை ரூ. 11,000-க்கு விற்கப்பட்ட ஆடு, இந்த வாரம் ரூ. 12,000-ம் வரை விலைபோனது. இதனால், ஆட்டுக்கிடாவிற்கு ரூ. 1000 வரை கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள், தொழிலாளா்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
‘அடுத்த வாரத்தில் கிராமப்புறக் கோயில் திருவிழாக்களும் முடிந்துவிடும். இதனால், அடுத்தடுத்த வாரங்களில் ஆடுகளின் விலை குறையலாம். ஆனால் ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பே மீண்டும் விலை அதிகரிக்கும். இதனால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு ஆடுகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் மீண்டும் விலை உயா்வதற்கு வாய்ப்புள்ளது’ என பேளூா் பகுதியைச் சோ்ந்த ஆடு வியாபாரிகள் தெரிவித்தனா்.
