மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட சுகாதாரத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடைகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொற்று பரவலுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சோப்பு அல்லது சானிடைசா் மூலம் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம். அத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும் நபா்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவா்களின் ஆலோசனையின்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழகஅரசு வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் இந்த தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
சுகாதாரத் துறையின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.