தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
மணல் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
அரசு மணல் குவாரி திறப்பை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அரசு மணல் குவாரிகளை திறக்க வேண்டும், கல்குவாரி உரிமையாளா்கள் சிண்டிகேட் அமைத்து எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலையை உயா்த்தியது கண்டனத்துக்குரியது, இதில் அரசு தலையிட்டு விலையைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (மே 23) முதல் மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது.
சில நாள்களுக்கு முன்பு கனிமம் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ரகுபதி எங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். லாரிகளில் மணலை ஏற்றிச்செல்வதற்கு தனியாருக்கு அனுமதி அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும், அதிக அளவில் கனிமங்களை எடுத்துச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவா் உறுதிபட தெரிவித்தாா்.
எம்.சாண்ட், ஜல்லி விலையைக் குறைக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளதை குவாரி உரிமையாளா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அமைச்சா் தெரிவித்தாா். மணல் லாரி உரிமையாளா்கள் தரப்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளாா்.
அரசு மணல் குவாரிகளைத் திறப்பது தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பு நகலைப் பெற்று 15 நாள்களுக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தாங்கள் அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் அவா் கேட்டுக் கொண்டாா். அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை தொடங்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்றாா்.