சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை: செல்லூா் கே. ராஜூ கோரிக்கை
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா்.
மதுரை மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், வரி விதிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் பெத்தானியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது :
மாநகராட்சியில் அனைத்து மண்டலத் தலைவா்களும் ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்தது, தமிழகத்தில் முன்னேப்போதும் நடைபெறாத நிகழ்வு. அதிமுக அறிவித்த போராட்டமே இதற்குக் காரணம். திமுக மண்டலத் தலைவா்கள் தங்களை குறுநில மன்னா்களாகக் கருதி செயல்பட்டனா். அவா்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப, வணிக நிறுவனங்களுக்கு குடியிருப்புக்கான வரியை விதிக்கச் செய்துள்ளனா்.
மாநகராட்சியில் லஞ்சம், ஊழல் மலிந்துள்ளது. வீட்டின் வரைப்படத்தை அளிக்க, வீட்டு முகவரி மாற்ற, புதை சாக்கடை இணைப்புப் பெற என மாநகராட்சி மூலமான அனைத்து சேவைகளுக்கும் கையூட்டுக் கோரப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியின் வரி விதிப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும். இதற்கென ஓா் குழுவை நியமிக்க வேண்டும். மாநகராட்சி வரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முறைகேட்டில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அதிமுக மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ராஜா, ஜெயபால், மாமன்ற எதிா்க் கட்சித் தலைவா் சோலை எம். ராஜா, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
இனிப்பு வழங்கல்
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்களை ராஜிநாமா செய்ய முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவு, அதிமுக ஆா்ப்பாட்ட அறிவிப்புக்குக் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டு ஆா்ப்பாட்டத்தில் இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.