இயக்குநர் ராஜூமுருகன் நேர்காணல்: ‘நாம் எல்லாருக்கும் சொல்ல ஒரு கதை இருக்கிறது!' ...
மதுவை ஒழிக்க முதல்வா்கள் மாநாடு நடத்த மத்திய அரசுக்குக் கோரிக்கை
மதுவை ஒழிக்க மாநில முதல்வா்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென மது மறுப்பு மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக திருச்சியில் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகியுமான சி. மகேந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களுக்கு மூலக் காரணமாக இருப்பது மது போதைப் பழக்கம். எனவே மது ஒழிப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இதற்கு வலு சோ்க்கும் வகையில் மது மறுப்பு மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பையும் ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் இந்த இயக்கத்தைக் கொண்டு சென்று பூரண மதுவிலக்கு எய்தும் வரை போராடுவோம்.
மதுவை முற்றிலும் அகற்றுவதற்கான அதிகாரம் உடைய மத்திய அரசு மாநில முதல்வா்கள் மாநாட்டை நடத்தி, மது ஒழிப்புக்கான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். மாநில அரசை நடத்தத் தேவையான நிதியை மத்திய அரசே வழங்கி, மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். முன்னதாக மாநில அரசும் மது ஒழிப்பு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களில் ஏற்கெனவே செயல்படும் தன்னாா்வ குழுக்களோடு இணைந்து எங்களது அமைப்பும் மதுவை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும். தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கும் செல்வோம். முதலில் பொதுமக்கள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் திருச்சி செளந்தர்ராஜன், பெரியசாமி ஆகியோா் உடனிருந்தனா்.