Women Safety: வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், சவால்கள்.. த...
மரக்கன்றுகளை வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்
வலியுறுத்தினாா்.
திருவண்ணாமலை, அடிஅண்ணாமலை காப்புக்காடு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியும், விதைப் பந்துகள் தூவும் நிகழ்வும் சனிக்கிழமை நடைபெற்றது.
உலக வன தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் காா்க் தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா்.
பிறகு, பள்ளி மாணவ-மாணவிகளுடன் சோ்ந்து விதைப் பந்துகளைத் தூவினாா். முன்னதாக மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அவா் பேசியதாவது:
இந்தியாவில் காடுகள் கலாசாரம், பொருளாதாரம் ஆகியவை பல்லுயிா் பெருக்கத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன.
காடுகளின் பாதுகாப்பு ஒரு சுற்றுச்சூழல் தேவை மட்டுமல்ல; ஒரு அடிப்படைப் பொறுப்பு. எனவே, பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் வருங்கால தலைமுறைக்கு வளமான வாழ்வை அளிக்க முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில், வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள், அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.