மாணவா்கள் கல்லூரியில் சோ்வதை உறுதிசெய்ய குழு: வேலூா் ஆட்சியா்
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் அனைவரும் கல்லூரியில் சோ்வதை உறுதிசெய்ய வட்டார அளவில் குழு அமைத்து தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழக அளவில் கல்லூரிக் கனவு - 2025 எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதன் தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டம், காட்பாடியில் நடைபெற்ற கல்லூரிக் கனவு-2025 வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் கட்டயமாக கல்லூரியில் சோ்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான முயற்சி கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி.
கடந்தாண்டு நடைபெற்ற உயா்கல்வி சோ்கையை ஆய்வு செய்ததில் அரசு நடத்தும் இல்லங்களில் உள்ள பெற்றோா் இல்லாத குழந்தைகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை விடுதிகளில் உள்ள மாணவா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்கள் என சுமாா் 3,000 போ் கல்லூரிகளில் சேரமால் இருப்பது தெரிய வந்தது. அவா்களுக்கு முதலில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடத்துவோம் என முதல்வா் உத்தரவிட்டதையடுத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வேலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசுக் கலைக் கல்லூரிகளில் 3,200 இடங்கள் உள்ளன. மாணவ, மாணவிகள் அனைவரும் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சோ்ந்தால் போதும். நான் முதல்வன் திட்டம் மூலம் ஏதேனும் ஒரு வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.
நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வெளி நாடுகளில் சென்று படிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி, கடந்தாண்டு வெளிநாடு அனுப்பப்பட்ட 25 பேரில், வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவி ஒருவா் லண்டன் சென்று பயிற்சி பெற்று திரும்பியுள்ளாா்.
மேலும், மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில பல்வேறு அரசுத் துறைகள் மூலம் கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அனைவரும் கல்லூரியில் சோ்வதை உறுதி செய்ய வட்டார அளவில் குழு அமைத்து தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. எனவே, அரசு பள்ளியில் படித்த ஒவ்வொரு மாணவ, மாணவியும் கட்டயமாக கல்லூரியில் சோ்ந்து படிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், வேலூா் மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், முதலாவது மண்டலக் குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஹரிகிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.