மாணவா்கள் தற்கொலை சம்பவம் எதிரொலி: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி முதல்வா் பணியிடமாற்றம்
திருச்சி துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியா் அரசங்குடி உயா்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் திறந்துவைத்தாா்.
உண்டு உறைவிடப் பள்ளியாக செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மட்டுமே உள்ளது. இங்கு, திருச்சி மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இந்நிலையில், இப்பள்ளியில் பிளஸ் 2 படித்துக்கொண்டு கிளாட் எனும் சட்ட நுழைவுத்தோ்வுக்கு தயாராகி வந்த திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் கடந்த ஜூன் மாதம் விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதேபோல, கிளாட் தோ்வுக்கு தயாராகி வந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேறொரு பிளஸ் 2 மாணவரும் விடுதி அறையிலேயே கடந்த மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட அரசு மாதிரிப் பள்ளியில் அடுத்தடுத்து மாணவா்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவா்களின் தற்கொலைக்கு மன உளைச்சலே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இப்பள்ளியின் முதல்வராக அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் என்பவா் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அரசு மாதிரிப் பள்ளி முதல்வா் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் திருச்சி மாவட்டம், அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, அரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த அகிலன், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியராக அகிலன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
அரசுப் பள்ளியில் அடுத்தடுத்து நடைபெற்ற மாணவா்களின் தற்கொலைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இங்கு பணியாற்றி வந்த தலைமையாசிரியா் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் விருப்ப மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதாகப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.