3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
மார்த்தாண்டம்: பைக் விபத்தில் 2 மாணவர்கள் பலி, போராட்டம்.. யார் காரணம்? - போலீஸார் சொல்வது என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பஸ் மற்றும் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தேங்காய்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த அஜ்மல், அப்சல் ஆகிய இரண்டு மாணவர்கள் பலியானார்கள்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், நாகர்கோவில் பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்ததது. அப்போது குழித்துறையில் இருந்து ஒரே பைக்கில் நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். மார்த்தாண்டம் கல்லுதொட்டி பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அரசு பேருந்தில் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக பேருந்தை ஓட்டி வந்த ராஜேஷ் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து அரசு போக்குவரத்துகழக ஓட்டுனர்கள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பைக்கை ஓட்டி வந்த மாணவர்கள் தான் அஜாக்கிரதையாக பேருந்து மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறி போராட்டத்தை தொடர்ந்தனார். இதை அடுத்து பைக்கை ஓட்டி வந்த மாணவன் அப்சல் மீது ஓட்டுனர் ராஜேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியானதில் பைக் பேருந்தில் மோதுவதும் அதில் பயணித்த நான்கு மாணவர்களும் தூக்கி வீசப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
இதற்கிடையே விபத்தில் இறந்த மாணவர்களின் உறவினர் ஒருவர் போக்குவரத்து ஊழியர்களை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களின் இடத்திலிருந்து நீங்கள் சிந்தித்துபாருங்கள். மாணவர்கள் அஜாக்கிரதையாக வந்தார்கள் என கூறுங்கள். ஆனால், மது குடித்துவிட்டு மாணவர்கள் வந்ததாக குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்ய வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். போலீஸாரும் அவர்கள் சொன்னது போன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், "நான்கு மாணவர்களும் குழித்துறை வாவுபலி பொருட்காட்சிக்கு சென்றுவிட்டு ஒரே பைக்கில் திரும்ப வந்துள்ளனர். அஜ்மல் (17) பைக் ஓட்டியுள்ளான். அவருக்கு பின்னால் அப்சல் (16), நாசில் (15) மற்றும் அஜித் (16) ஆகியோர் என 4 பேர் பைக்கில் அமர்ந்து பயணித்துள்ளனர்.
அப்போது ராஜேஷ் என்பவர் அரசு பஸ்ஸை வேகமாக ஓட்டி வந்து மோதியதாக மாணவன் அஜித் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிந்துள்ளோம். அதுபோன்று, அரசு பஸ் டிரைவர் ராஜேஷ்(38) அளித்த புகாரில், ஹெல்மெட் அணியாமல் ஒரே பைக்கில் 4 பேர் பயணித்ததுடன், வேகமாக வந்ததை பார்த்து பஸ்ஸை நிறுத்திவிட்டதாகவும். அவர்கள் பஸ்ஸின் முன்புறம் மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மற்றொரு வழக்கு பதிந்துள்ளோம். இரு தரப்பு புகார்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.