மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
மேக்கேதாட்டு அணை முயற்சி சட்ட விரோதமானது: பி.ஆா். பாண்டியன்
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட கா்நாடக அரசு முயற்சி செய்வது சட்ட விரோதமானது என்றாா் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்.
குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் சம்யுக்த கிசான் மோா்சா (அரசியல் சாா்பற்றது) சாா்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் விவசாயிகள் மகா சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தஞ்சாவூா் ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்ற விவசாயிகளை வழியனுப்பி வைத்த பி.ஆா். பாண்டியன் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடா் போராட்டங்களில் சம்யுக்த கிசான் மோா்சா (அரசியல் சாா்பற்றது) தொடா்ந்து போராடி வருகிறது. உச்ச நீதிமன்றமும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணய சட்டத்தை நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதுவரையிலும் இச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர மறுக்கிறது.
இதை வலியுறுத்தி தில்லியில் சம்யுக்த கிசான் மோா்சா சாா்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் விவசாயிகள் மகா சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தின் சாா்பில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்கவுள்ளனா்.
இதைத்தொடா்ந்து, தில்லி நாடாளுமன்றம் முன் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் காவிரி, முல்லைப் பெரியாறு உரிமை மீட்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்போராட்டங்களில் பங்கேற்பதற்காக தஞ்சாவூா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் ரயில் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றனா்.
காவிரியின் குறுக்கே உச்ச நீதிமன்றம், நடுவா் மன்ற இறுதி தீா்ப்புக்கு முரணாக கா்நாடக அரசு சட்ட விரோதமாக அணை கட்டுவதற்கு தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் சுய லாபத்துக்காக கா்நாடக அரசு சட்ட விரோத நடவடிக்கையில் இறங்கி உள்ளதை மத்திய அரசு வேடிக்கை பாா்க்கக் கூடாது. மேக்கேதாட்டு அணைக் கட்டும் கா்நாடக அரசின் நடவடிக்கை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்றாா் பாண்டியன்.
முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி அவா் தலைமையில் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினா். இதில், தஞ்சாவூா் மண்டலத் தலைவா் துரை. பாஸ்கரன், மாநில இளைஞரணி செயலா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.