மோடி ஆட்சியில் சுகாதாரத் துறை அபார வளா்ச்சி: அமித் ஷா
நாகபுரி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மருத்துவத் துறையும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளும் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியைப் பெற்றுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுகாதாரத் துறைக்கு எவ்வித முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் திங்கள்கிழமை தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர வளாகம் அமைப்பதற்கான பணிகளுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினாா். அதேபோல நாகபுரி தேசிய புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கான தங்குமிடங்கள் கட்டும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ரூ.1.35 லட்சம் கோடியாகும். இது மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் ரூ.37,000 கோடியாக இருந்தது. நாகபுரியில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அனைத்து முக்கிய மருத்துவ வசதிகளும், அதற்கான கருவிகளும் உள்ளன.
உலகிலேயே இந்தியாவில்தான் வாய்ப் புற்றுநோய் அதிகமாக உள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புற்றுநோய் சிகிச்சை என்பது அனைவருக்கும் எளிதில் கிடைக்காத நிலை இருந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் பல சிறந்த சிகிச்சை மையங்கள் உருவாகியுள்ளன.
நாகபுரி தேசிய புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கரைச் சோ்ந்தவா்களும் சிகிச்சைக்காக வருகின்றனா். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மருத்துவத் துறையும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளும் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியைப் பெற்றுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ சிகிச்சைக்கு போதிய நிதிவசதி இல்லாத ஏழைகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனா். மோடி ஆட்சியில் 60 கோடி ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. நாட்டில் இப்போது 23 அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிலையங்களுக்கு (எய்ம்ஸ்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி அமைப்பதற்கு முன்பு மொத்தம் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளே செயல்பட்டு வந்தனா்.
2014-இல் நாட்டில் 387 அரசு மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 780-ஆக உயா்ந்துள்ளது. 2014-இல் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 51,000-ஆக இருந்தது. இப்போது 1.18 லட்சமாக உயா்ந்துள்ளது. மருத்துவ மேற்படிப்பு இடங்கள் எண்ணிக்கை 31,000-இல் இருந்து 74,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
சா்வதேச யோகா தினம், ஃபிட் இந்தியா, கேலோ இந்தியா உள்ளிட்ட மக்களின் உடல்நலன் சாா்ந்த திட்டங்களையும் மோடி அரசு உத்வேகத்துடன் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. சுகாதாரமான குடிநீா் வசதி, கழிவறை வசதி, இலவச எரிவாயு வசதி போன்றவற்றின் மூலம் பல உடல்நல பாதிப்புகளில் இருந்து மக்கள் முன்னதாகவே காக்கப்பட்டுள்ளனா் என்றாா்.