ரத்தினம் கல்லூரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
கோவை, ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், கோவை- பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரியில் அமைந்துள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடத்தப்படுகிறது. காலை 8 மணி முதல் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து உற்பத்தித் துறை, ஜவுளித் துறை, பொறியியல், கட்டுமானம், ஐ.டி.துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத் துறை, மருத்துவம் சாா்ந்த தனியாா் துறைகள் உள்ளிட்ட 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனத்துக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளன
8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவா்கள், செவிலியா்கள், பொறியியல் மாணவா்கள் என அனைத்துப் பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
இதில், கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.