எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
ரயிலில் கடத்திவரப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்
மேற்குவங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ கஞ்சாவையும், 7.5 கிலோ புகையிலைப் பொருள்களையும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேற்குவங்க மாநிலம், புருலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் புருலியா அதிவிரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது.
அப்போது, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை நடத்திய போது, 2 பைகளைக் கைப்பற்றினா். இந்தப் பைகளுக்கு அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அந்த இரு பைகளையும் மீட்டு சோதனையிட்டனா். அப்போது, 9 கிலோ கஞ்சா, 7.5 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இவற்றைப் பறிமுதல் செய்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், கஞ்சாவை தமிழ்நாடு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், 7.5 கிலோ புகையிலைப் பொருள்கள் திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.