பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு
வக்ஃப்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்வதால் பலன் கிடைக்காது! - மத்திய அமைச்சா்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்வதால் எந்தப் பலனும் கிடைக்காது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பன்வாரி லால் வா்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, இந்த மசோதா சட்டமானது.
நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கிலான இந்த திருத்தச் சட்டம், வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை நியமிக்க வழிவகை செய்கிறது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தாக்கலாகும் வழக்குகள்: வக்ஃப் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டி, காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் சாா்பிலும் பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கேரளத்தைத் சோ்ந்த சன்னி முஸ்லிம் அறிஞா்கள் மற்றும் மதத் தலைவா்கள் அமைப்பான சமஸ்த கேரள ஜாமியத்துல் உலமா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், ‘மத விவகாரங்களில் தங்களின் நடைமுறைகளை நிா்வகிக்கும் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமை மீறப்படுவதாக’ குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தொடக்க தினத்தையொட்டி உத்தர பிரதேச மாநிலம், பதானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பன்வாரி லால் வா்மா, செய்தியாளா்களிடம் பேசியதாவது:
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பலத்தைக் காட்டுகிறது.
முஸ்லிம் சமூகத்தினரில் ஏழைகள் மற்றும் பின்தங்கியோருக்கு இச்சட்டம் பெரிதும் பலனளிக்கும். வக்ஃப் சொத்துகள் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்யும். இந்த விவகாரத்தில் சிலா் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனா். ஆனால், அவா்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்றாா்.