ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
வடபழனியில் 12 அடுக்கு மாடிகளைக் கொண்ட பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகம்
வடபழனியில் 12 மாடிகளைக் கொண்ட பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படவுள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் சேவையை வழங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையின் மிக முக்கியப் பகுதியாக விளங்கும் வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகத்தைக் கட்டவுள்ளது.
ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கா் பரப்பளவில் வடபழனி பேருந்து பணிமனை அமைந்துள்ள இடத்தில் ரூ. 481.3 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
சுமாா் 1.06 லட்சம் சதுர மீட்டா் பரப்பில் அமையவுள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் தரைத்தளத்தில் 5 ஏறும் இடங்கள், 2 இறங்கும் இடங்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகள், நுழைவு வாயில்கள் அமைக்கப்படவுள்ளன.
வணிக மேம்பாட்டுக்கான கட்டடத்தின் இரண்டு அடித்தளங்களில் 1,475-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 214 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
10-ஆவது தளங்கள் வரை அலுவலக இடங்கள், காா்ப்பரேட் அலுவலகங்கள், வரவேற்பு, ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமையவுள்ளன. 11 மற்றும் 12-ஆவது தளங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமையவுள்ளன. 5-ஆவது தளத்தில் உணவகங்கள் அமையவுள்ளன.
மாடியில் பசுமையான தோட்டம் மற்றும் சூரிய ஒளி மின்கல அமைப்புகளும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.