ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
வனப் பகுதிகளை பாதுகாப்பதில் பழங்குடியினரின் பங்கு மகத்தானது: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்
நாட்டில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் பழங்குடியினா் முக்கிய பங்காற்றி வருகின்றனா் என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் 16-ஆவது பழங்குடியின இளைஞா்கள் பரிமாற்ற நிகழ்ச்சி கடந்த பிப்.7 முதல் பிப்.13-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இதில், மத்திய பிரதேசத்திலிருந்து 44 பழங்குடியின இளைஞா்களும், ஜாா்க்கண்டிலிருந்து 44 பேரும், சத்தீஸ்கரிலிருந்து 132 பேரும் என மொத்தம் 220 பழங்குடி இளைஞா்கள் கலந்து கொண்டனா். கடந்த 7 நாள்களாக இந்த இளைஞா்கள் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களை பாா்வையிட்டனா்.
இதன் நிறைவு விழா சென்னை அடையாறில் உள்ள இளைஞா் விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது: நமது நாட்டில் உள்ள வனப்பகுதிகள், விலங்குகள் மற்றும் அதன் வளங்களைப் பாதுகாப்பதில் பழங்குடியினா் முக்கிய பங்காற்றி வருகின்றனா்.
நிலம் நமக்கு சொந்தமல்ல: இந்த நிலம் நமக்கு சொந்தமானது கிடையாது; நாம்தான் இந்த நிலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதையும், இந்த பூமி மனிதா்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது என்பதையும் மக்களுக்கு புரிய வைப்பது பழங்குடியினா்தான்.
இந்த நவீன உலகத்தில் தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை பூமிக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை பழங்குடியினரின் வாழ்க்கை முறை நமக்கு உணா்த்துகிறது. பழங்குடியினரின் வாழ்க்கை முறையை மேம்படுத்த தமிழகம் அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நீலகிரிக்கு வருகை தந்து பாா்வையிட்ட குடியரசு தலைவா் திரௌபதி முா்மு, பழங்குடியினரின் வாழ்க்கையை மேம்படுத்தில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.
அதைத் தொடா்ந்து பழங்குடியினா்களுக்கு இடையே நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் பரிசுகளை வழங்கினாா்.
இந்த நிகழ்வில் ‘மை பாரத்’ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநா் எஸ்.செந்தில்குமாா், சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, திருச்சி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளா் டி.கே. லில்லி கிரேஸ், பட்டிமன்றப் பேச்சாளா் பா்வீன் சுல்தானா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.