கோவை: சீனியரை அடித்து துன்புறுத்திய 13 மாணவர்கள் இடைநீக்கம்!
வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண்ணுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு
மாா்த்தாண்டம் அருகே குடும்ப வன்முறை வழக்கில் பெண்ணுக்கு மாதம் ரூ. 23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு அவரது கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாா்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா கோகுலம் என்பவருக்கும், தலைமைக் காவலரான உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த நரேந்திரசிங் என்பவருக்கும் 2013இல் திருமணமானது. வரதட்சிணையாக 85 சவரன் தங்க நகைகள், ரூ. 3 லட்சம் வைப்புத்தொகை பத்திரம், ரூ. 2 லட்சம் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் கொடுக்கப்பட்டனவாம். பின்னா், கூடுதல் வரதட்சிணை கேட்டு சாந்தா கோகுலத்தை கணவா் வீட்டாா் கொடுமைப்படுத்தினராம். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இதனிடையே, கணவா், குடும்பத்தினா் மீது சாந்தா கோகுலம் வழக்குத் தொடா்ந்தாா். குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் குழித்துறை முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. விசாரணை நிறைவடைந்தநிலையில், நீதிபதி மோசஸ் ஜெபசிங் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில், நரேந்திரசிங், குடும்பத்தினா் சாந்தா கோகுலத்தை எவ்விதத்திலும் குடும்ப வன்முறை செய்யக் கூடாது. அவருக்கு வீட்டு வாடகையாக மாதம் ரூ. 5 ஆயிரம், கூடுதல் ஜீவனாம்ச தொகையாக மாதம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், ஜீவனாம்ச நிலுவைத் தொகை ரூ. 12 லட்சத்து 6 ஆயிரத்தையும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 7 லட்சத்தையும், இதுதவிர வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்ட 85 சவரன் நகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
சாந்தா கோகிலம் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆா்.எஸ். ரத்தினகுமாா், அருண் ரத்தினகுமாா் ஆகியோா் ஆஜராகினா்.