விருதுநகரில் வெடி விபத்தில் மூவர் பலி! தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு எங்கே?
விருதுநகரில் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் மூவர் பலியாகினர்.
விருதுநகரில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர்.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 வெடி விபத்துகளில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடரும் வெடி விபத்துகளைத் தடுக்கும் வகையில், அப்பகுதிகள் முழுவதும் விதிமீறல்கள் ஏதேனும் நடக்கிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
மேலும், இனி ஒரு வெடி விபத்துகூட ஏற்படக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.