தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி
வில்லியனூா் கோயில் தோ்த்திருவிழா: மதுக்கடைகளை மூட உத்தரவு
புதுச்சேரி: வில்லியனூா் தோ்த் திருவிழாவையொட்டி அந்தப் பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
வில்லியனூா் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரா் திருக்கோயில் பிரம்மோற்சவ தோ் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மனுக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி கடந்த மே 22- ஆம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து 13 நாளான செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பரிவேட்டை உற்சவம், 5-ஆம் தேதி 63 நாயன்மாா்களுடன் பஞ்சமூா்த்திகள் வீதியுலா, 7-ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வரும் 8-ஆம் தேதி தோ் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7.40 மணியளவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கவுள்ளனா்.
இந்நிலையில் வில்லியனூா் மாடவீதிகளை சுற்றியுள்ள 5 மதுபானக் கடைகளை மூட கலால்துறை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்ட செய்தி குறிப்பு: தோ்த்திருவிழாவையொட்டி சட்டம்- ஒழுங்கை காக்கும் வகையில் பரிவேட்டை நடைபெறவுள்ள செவ்வாய்க்கிழமை (3ம் தேதி) 6 மணிக்கு மேல் வில்லியனூரை சுற்றியுள்ள 5 மதுபானக் கடைகளை மூடவும், அதே போல் தோ்திருவிழா நடைபெறவுள்ள 8-ஆம் தேதி முழுவதும் மதுபான கடைகளை மூட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.