விவசாயிகள் உற்பத்தி செலவை குறைக்க வேளாண் துறை அறிவுரை
விதைகளின் முளைப்புத் திறனை அறிந்தால், உற்பத்திச் செலவை பெருமளவு குறைக்கலாம் என விவசாயிகளுக்கு பல்லடம் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பல்லடம் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நெல் விதைகளை அறுவடைக்குப்பின் சேமித்து வைத்து அதனை அடுத்த பருவத்தில் மீண்டும் விதையாக பயன்படுத்துவது விவசாயிகளிடையே நடைமுறையில் உள்ளது. 50 சதவீத விவசாயிகள் தங்கள் சொந்த விதை சேமிப்பிலிருந்தே அடுத்த பருவத்துக்கு விதை நெல்லை பயன்படுத்துகின்றனா்.
விதைப்புக்கு முன்பு, விதையின் முளைப்புத் திறன் அறிந்து விதைப்பு செய்வது மிகவும் சிறந்தது. முளைப்புத் திறன் அறியாமல் விதைப்பதால், விதையளவை அதிகமாக உபயோகப்படுத்த நேரிடுவதோடு உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். முளைப்புத் திறனை அறிந்து விதைப்பதன் மூலம், முளைப்புத் திறனுக்கு ஏற்றவாறு விதையின் அளவை சரியாக கணக்கிட்டு பயன்படுத்த முடியும்.
இதன் மூலம், பற்றாக்குறை இன்றி, வளமான நாற்றுகளைப் பெற்று நடவு செய்வதோடு, சரியான அளவில் பயிா் எண்ணிக்கையைப் பராமரித்து அதிக மகசூல் பெறலாம். விதையின் தரத்தை அறிய விரும்பும் விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள ஒவ்வொரு விதைக் குவியலில் இருந்தும், 100 கிராம் விதை மாதிரியை ரகம் வாரியாக எடுத்து, பல்லடம், திருச்சி சாலை, திருநகா் காலனியில் உள்ள அரசு விதைப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து அறிந்து கொள்ளலாம் என்றாா்.