ஆண் நண்பரை தாக்கி இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத குற்றவாளிகள்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், திருபுவனை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பணியை முடித்துவிட்டு, இரவு தன்னுடன் பணியாற்றும் ஆண் நண்பருடன் அவரின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்குபேர் இவர்களை வழி மறித்திருக்கிறார்கள்.
`நீங்க அண்ணன் தங்கச்சியா ? ஏன் ஒன்னாப் போறீங்க ?’
தொடர்ந்து, `நீங்க அண்ணன் தங்கச்சியா? ஏன் ஒன்னாப் போறீங்க ?’ என்று அந்த நான்கு பேரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு, `வேலை முடிந்து வீட்டுக்குப் போகிறோம்’ என்று அந்த இளம்பெண் கூறியிருக்கிறார்.

அதையடுத்து அந்த ஆண் நண்பரை கடுமையாக தாக்கிய அந்தக் கும்பல், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அருகில் உள்ள வயல்வெளிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியது.
அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த பெண், மதகடிப்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்றார். அப்போது கண்டமங்கலம் காவல் நிலையத்திலும் புகாரளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் பள்ளிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், அழகுவேல் (எ) ஹரிராமன், சேதுபதி, அலர்ட் (எ) அய்யனார் போன்றவர்களை கைது செய்தனர்.
போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூட்டுப் பாலியல் செய்ததை ஒப்புக் கொண்டனர்.
தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத குற்றவாளிகள்
அதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் அனைத்து சாட்சிகள் மற்றும் அரசு தரப்பு சாட்சிகள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ``குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நான்கு பேர் மீதும் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அய்யனார், அழகுவேல் (எ) ஹரிராமன், சேதுபதி, அலர்ட் (எ) அய்யனார் நான்கு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

அதேபோல இந்த நான்கு பேருக்கும் தலா ரூ.10,000/- அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி பாக்கியஜோதி.
தீர்ப்பைக் கேட்டதும் நான்குபேரும் நீதிமன்றம் வளாகத்திலேயே கதறி அழுதனர். தொடர்ந்து அவர்களை அழைத்துச் சென்ற போலீஸார், கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.