இந்தியாவுடன் வலுவான நட்புறவு! பயங்கரவாதத்துக்கு டென்மார்க் கண்டனம்
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ராஸ்மஸ் அபில்ட்கார்ட் கிறிஸ்டென்சன் தெரிவித்ததாவது, இந்தியாவின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்திய அரசுக்கும் மக்களுக்கும் தனது அனுதாபத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்திய முதல் நாடுகளில் டென்மார்க்கும் ஒன்றாகும்.
பயங்கரவாதம் எங்கு நிகழ்த்தப்பட்டாலும், அதற்கு எதிராக டென்மார்க் இருப்பதை இந்திய அரசுக்கு நாங்கள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளோம். ஐ.நா. அவையிலும் இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளோம். இந்தியாவுடன் மிகவும் வலுவான நட்புறவை டென்மார்க் கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இருவரும் சேர்ந்து பசுமை கூட்டாண்மையை நிறுவினோம். தொழில்நுட்பத் துறையில், டென்மார்க் வழங்கும் பரந்த திறன்களையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம்.
பசுமை மாற்றம், எரிசக்தி, நீர், விவசாயம் மற்றும் அதனை எவ்வாறு நிலையானதாக மாற்றுவது என்பதில் எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது, இந்தியா, ஏற்கெனவே அதிக முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கூறினார்.