சிறந்த நூல் பரிசுத் திட்டம்: 66 பேருக்கு பரிசு - சான்றிதழ்: அமைச்சா் மு.பெ. சாம...
இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்
இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப்ரவரி 6) நாக்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: 2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? ஷுப்மன் கில் பதில்!
ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?
இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாமலிருப்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அவர் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடினார். அப்போது, ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் அவருக்கென நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டதாக உணர்ந்தேன்.
அதன் பின், அவர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. ஆனால், உள்ளூர் போட்டிகளில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்படுவார். மெதுவான ஆடுகளங்களில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் மிடில் ஆர்டரில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரை மீண்டும் அணியில் பார்க்க உள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இதையும் படிக்க: அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய அணி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.