இந்திய மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கம்: விண்ணிலிருந்து சுபான்ஷு சுக்லா
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தின் சகாப்தம் தொடங்கிவிட்டதாக டிராகன் விண்கலத்திலிருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரின் விண்வெளிப் பயணம் இன்று தொடங்கியது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் பகல் 12.01 மணிக்கு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.
நாளை மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் இவர்கள், 14 நாள்கள் அங்கேயே தங்கி ஆய்வு நடத்திவிட்டு பூமிக்கு திரும்பவுள்ளனர்.
இந்த நிலையில், ஃபால்கான் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 10 வது நிமிடத்தில், சுபான்ஷு சுக்லா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, “எனது அன்பான நாட்டு மக்களே, வணக்கம் (நமஸ்காரம்)! 41 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் விண்வெளியை அடைந்துவிட்டோம். நாங்கள் பூமியை சுமார் 7.5 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறோம். எனது தோளி இந்திய மூவர்ணக் கொடி உள்ளது.
இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமல்ல, இந்தியாவின் மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கமும் கூட. நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தில் ஒன்றாகச் சேர்ந்து பயணிப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த 1984 ஆம் ஆண்டில் இந்திய வீரா் ராகேஷ் சர்மா விண்வெளிக்குப் பயணித்தார். அவருக்குப் பின்னர் தற்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் வீரர் என்ற பெருமையும் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.